’என்னப்பா கான்செப்ட் இது? இந்த கான்செப்டுக்கு 10 கதைகள் வந்தாலே உங்கள் முயற்சி வெற்றின்னு நினைச்சுக்கோங்க..’
- சவால் சிறுகதைப் போட்டி அறிவித்த உடனே எனக்கும் பரிசல்காரனுக்கும் அடுத்தடுத்து வந்த அலைபேசி அழைப்புகள் இந்த ஒரே செய்தியைத்தான் தந்தன.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நண்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும். நல்ல இலக்கியத்தரமான சிறுகதைகளை வெளிக்கொண்டுவரவேண்டும், தமிழுக்கு இயன்ற தொண்டாற்ற வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கத்தான் செய்கிறது, அதற்கு நாங்களும் விதிவிலக்கல்லர். அதுபோன்ற விஷயங்களை முன்னெடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பு மூத்தவர்களுக்கும், இணைய, அச்சு இதழ்களுக்கும் இருக்கிறது. அத்தகைய நிகழ்வுகளும் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன. தற்சமயம் ‘வம்சி’ நடத்தும் சிறுகதைப்போட்டி அப்படியொரு அழகிய உதாரணமாகும். (வம்சி சிறுகதைப்போட்டிக்கான இறுதிநாள் 02.11.11, ஆர்வமிருப்பவர்கள் விரைந்து கதைகளை அனுப்புங்கள்). எங்களைப் பொறுத்தவரை அதைப்போன்ற சீரிய விஷயங்களில் நாங்கள் இன்னும் மாணவர்களே என்று கருதுகிறோம். ஆகவே நாங்கள் அது போன்ற ஆசையில் இந்த சிறுகதைப்போட்டியினை நடத்தவில்லை என்றும் கொள்ளலாம்..
இதை ஒரு சுவாரசியமான விளையாட்டு என்ற வகையில் அணுகலாம். மேலும் சவால்களுக்கு உட்பட்டு வித்தியாசமான கதைகளைத் தரவேண்டியதிருப்பதும் புதியவர்களை எழுத ஊக்குவிக்கும் ஒரு காரணிதான் அல்லவா.? புதிய வலைப்பூக்களைத் துவக்கிக்கொண்டு சென்ற முறை பல இணைய வாசகர்கள் கதையெழுத முன்வந்தனர். இந்த முறையும் அதே நல்ல விஷயத்தை நாம் காண்கிறோம். எப்படி எழுதத் துவங்குவது என்ற தயக்கத்தில் இருப்பவர்களுக்கு இது எளிமையாக இருக்கலாம். அவ்வளவே.!
இருப்பினும் மேற்சொன்ன தொலைபேசி அழைப்புகள் எங்களைப் பயமுறுத்திக்கொண்டிருந்தன. ஆனால், எங்களை ஏமாற்றவில்லை நீங்கள்.. 78 கதைகள் போட்டிக்கு வந்து குவிந்துள்ளன. நடுவர்களும் ‘அட! சிக்கலான சவால் என்பதால் குறைந்த அளவே கதைகள் வரும்.. எங்களுக்கும் வேலை மிச்சம் என்றிருந்தோம். இத்தனைக் கதைகளா.?’ என்று சந்தோஷப்பட்டனர். ஆம் சென்ற ஆண்டை விட சிக்கலான சவால் எனினும் சென்ற ஆண்டைவிட அதிக ஆதரவையே இப்போதும் தந்திருக்கிறீர்கள்.
ஆகவே நண்பர்களே... நடுவர் குழு கதைகளை அலசிக் கொண்டிருக்கிறது. முடிவுகள் இம்மாதம் 15 ம் தேதி அன்று வெளியாகும்.
கதைகள் அனைத்தும் யுடான்ஸ் திரட்டியில் ஒருங்கமைக்கப்பட்டுள்ளன. அவை இங்கே காணக்கிடைக்கும். அனைவரும் சென்று கதைகளை வாசித்து எழுதியவர்களை பின்னூட்டங்களில் ஊக்குவிக்குமாறும், பிடித்த கதைகளுக்கு யுடான்ஸ் திரட்டியில் வாக்களிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் வாக்குகளும் வெற்றிக்கான 10 சதவீத மதிப்பை வழங்க இருக்கின்றன என்பதை மறவாதீர்கள். நவ.12ம் தேதி வரை பெறப்படும் வாக்குகள் கணக்கில் கொள்ளப்படும்.
கலந்து கொண்டு சிறப்பித்த, ஆதரவு தந்த, பின்னின்ற ஒவ்வொருவருக்கும் மற்றும் போட்டியை ஸ்பான்ஸர் செய்த யுடான்ஸ் திரட்டிக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.
-----------
ஏற்கனவே களத்திலிருக்கும் கதைகள் –1 ஐக் கண்டிருப்பீர்கள். அதில் 21 கதைகளின் வரிசை இருந்தது. மீதமிருக்கும் 57 கதைகளின் தொகுப்பு தகுந்த இணைப்புகளுடன் இதோ கீழே தரப்பட்டுள்ளது. போட்டிக்கு வரும் கதைகளின் சுட்டி, தரப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்பட்டு, யுடான்ஸ் திரட்டியிலும் இணைக்கப்படவேண்டும் என்று விதிமுறை வைத்திருந்தோம். இருப்பினும் ஒரு சில கதைகள் இதில் ஒன்றை மட்டுமே செய்திருந்தன, ஆயினும் அவையும் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டன. நீங்கள் ஏற்கனவே போட்டியில் கலந்துகொண்டு மெயில்கள் அனுப்பியிருந்தும், இந்த இரண்டு தொகுப்புகளிலும் உங்கள் கதை இடம்பெறவில்லை எனில் உடன் தொடர்புகொள்ளுங்கள்.. thaamiraa@gmail.com
வெற்றிக் கதைகளுடனும், பரிசுகளுடனும் விரைவில் சந்திக்கிறோம். நன்றி. வாழ்த்துகள்.
-------------
களத்திலிருக்கும் கதைகள் –2
ஒரு முக்கிய அறிவிப்பு : போட்டிக் கதைகள் ஒவ்வொன்றின் உரிமையும் அதனதன் ஆசிரியர்களையேச் சாரும். யுடான்ஸ் திரட்டி, பரிசல்காரன் மற்றும் எனது இந்தத் தளங்களில் கதைகளின் சுட்டி வாசகர்களிடம் கொண்டுசெல்லும் நோக்கில் தரப்படுகிறதே தவிர, பிறர் கதைகளை ஆசிரியர்களின் அனுமதியின்றி எங்கும் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
.

4 comments:
பல மாதங்கள் முன்பு வலைப்பூவினைத் துவங்கியிருந்தாலும், எதை எழுதுவது என்கிற எண்ணத்திலேயே சில மாதங்கள் கழிந்து விட்டன..
பின்பு, (வீட்டில் இருந்தால்) வாரம் ஒரு பதிவு எழுதுவது என்று முடிவு செய்து எழுதலானேன்..
ஆனால், இந்த போட்டியைக் கண்டதும் தான் ஒரு நல்ல கதையைப் படைக்க வேண்டும் என்கிற ஒரு பொறி எழுந்தது..
"போட்டிகளில் வெற்றி பெறுவதை விட பங்கு பெறுவதே மிக முக்கியம்" அல்லவா?
எனவே, சிறிது நாட்கள் யோசித்து என் கதையை இட்டேன்..
போட்டியினை அறிவித்து என் கற்பனைத்திறனையும், எழுதும் ஆர்வத்தையும் ஊக்கப்படுத்தியமைக்கு பரிசல், ஆதி மற்றும் யுடான்ஸ் குழு ஆகியோருக்கு என் நன்றிகள்!!
பல கதைகள் புதுப்புது கோணங்களில் எழுத்தப்பட்டிருக்கின்றன! பதிவர்களை சிந்திக்க தூண்டிய உங்களின் (சுவாரஸ்யமான விளையாட்டு) முயற்சி சிறக்கவும், தொடரவும் வாழ்த்துக்கள்,
// யாரிடமும் சொல்லாத லதை//
ஆதி... ஒரு சின்ன திருத்தம்... பட்டியலில் என்னுடைய யாரிடமும் சொல்லாத கதை... லதையாகிவிட்டது...
நல்லவேளை வதையாகவில்லை என்று நினைக்கிறேன். :-))))
நல்ல வேளை கடைசி நாள் வரை காத்திருந்தேன்... ஆனா அந்த ஒரு வாரம் மண்டைய உடைச்சி கிட்டது தான் கஷ்டமாக இருந்தது...
Post a Comment